வேலூர் அருகே, ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி - டிரைவர் உள்பட 4 பேர் காயம்
வேலூர் அருகே ஆட்டோமீது கன்டெய்னர் லாரி மேதியதில் ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
வேலூர்,
ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் நேற்று காலையில் 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி ஆட்டோவை ஓட்டிவந்தார். வேலூரை அடுத்த பெருமுகை அருகே வந்தபோது பின்னால் ஒரு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது.
திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற ஆட்டோமீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து, அதில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் டிரைவர் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.
அவர்களில் மேல்விஷாரம் ஹாஜிபேட்டையை சேர்ந்த நவீஸ் அகமது (வயது22) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான நவீஸ் அகமது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.