திருத்தங்கல் பகுதியில் போலி வருவாய் அதிகாரி கைது
திருத்தங்கல் பகுதியில் போலி வருவாய் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருத்தங்கல்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நாச்சியார்பட்டி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் குருநாதன்(வயது52). இவர் மீது ராஜபாளையம், சிவகங்கை பகுதி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வருவாய்த்துறை என்று குறிப்பிட்டுக்கொண்டு சிவகாசி மற்றும் திருத்தங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்களிடம் முதியோர் பென்சன், பட்டாமாறுதல் பெற்றுதருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, அவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் குருநாதன் வருவாய் அதிகாரி என கூறி பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்தனர். திருத்தங்கல் பகுதியில் போலி வருவாய் அதிகாரி பிடிபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.