அதிகாரிகள், மருத்துவ குழுவினரின் சிறப்பான பணியால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

திருச்சி ரோட்டரி சங்கங்களின் சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள ரோட்டரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2020-06-11 03:43 GMT
மலைக்கோட்டை, 

திருச்சி ரோட்டரி சங்கங்களின் சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள ரோட்டரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோய் தொற்றை கண்டுபிடிக்க உதவும் மருத்துவ உபகரணங்களை, அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. 

திருச்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு அதிகாரிகள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தொற்று இல்லாத மாவட்டமாக திருச்சியை மாற்ற முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் டாக்டர் ஜமீர் பாட்சா, திருச்சி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா, மருத்துவமனை இயக்குனர் டாக்டர் லட்சுமி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான அனலைசர் கருவி, அல்ட்ரா சவுண்ட் கலர் டாப்லர், டிஜிட்டல் இருதய பரிசோதனை வரைபடக்கருவி ஆகிய மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கும், மாவட்டத்தில் உள்ள முசிறி, தொட்டியம், துறையூர், துவரங்குறிச்சி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்