காதல் தோல்வியால் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரியில் காதல் தோல்வியால் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-06-12 07:58 GMT
மூலக்குளம்,

புதுவை தர்மாபுரி கலைமகள் நகரை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் ரஞ்சனி (வயது22). இவர் பி.ஏ. படித்து முடித்துவிட்டு அய்யங்குட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ரஞ்சனி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் ரஞ்சனி அவருடைய காதலனுக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரின் காதலன் ரஞ்சனியின் தம்பி விக்னேசுக்கு போன் செய்து உனது அக்காளை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து விக்னேஷ் அவரின் பெற்றோர் மற்றும் அக்காள் ரஞ்சனியிடம் தெரிவித்தார். இதனால் ரஞ்சனி மிகவும் மனமுடைந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி அவருடைய அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்