திருக்கோவிலூர் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது

திருக்கோவிலூர் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினரை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2022-05-18 17:01 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் கோகுல்(வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல், தன்னை கிண்டல் செய்ததாக  கூறி அதே பள்ளியில் படித்து வரும் 17 வயதுடைய மாணவர் கோகுலை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்து, கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அந்த மாணவரை அவரது சித்தப்பா கனகனந்தல் கிராமத்தை சேர்ந்த இளம்வழுதி(38), கொலை குறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் மோட்டார் சைக்கிளில் வைத்து சுற்றிக்கொண்டு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இளம்வழுதியையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்