“மோடியை தோற்கடியுங்கள், இல்லையேல் அவர்தான் எப்போதும் பிரதமர்” கெஜ்ரிவால் பேச்சு

இந்த தேர்தலில் மோடியை தோற்கடியுங்கள், இல்லையேல் அவர்தான் நிரந்தர பிரதமராக இருப்பார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Update: 2019-03-24 21:16 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா, நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இன்றைய தினம் மோடி அரசை யார் கேள்வி கேட்டாலும், ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்துகிறார்கள். டெல்லி அருகே குர்கானில் ஒரு முஸ்லிம் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல், சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

மோடி அரசு, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கையை பின்பற்றுகிறது.

இந்த தேர்தலில், என்ன விலை கொடுத்தாவது மோடி அரசை மீண்டும் வரவிடாமல் தடுப்பதே ஒவ்வொரு தேச பக்தரின் நோக்கமாக இருக்க வேண்டும். மோடியை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

ஒருவேளை, மோடி மீண்டும் பிரதமரானால், அதன்பிறகு தேர்தலே நடத்தப்படாது. மோடியே நிரந்தர பிரதமராக எப்போதும் இருப்பார்.

அந்த அளவுக்கு ஜனநாயகமே முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

மேலும் செய்திகள்