ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பரூதின் டுவிட்டர் கணக்கில் ஹேக்கர்கள் கைவரிசை
ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதினின் டுவிட்டர் கணக்கில் பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஊடுருவினர். #tamilnews | #latesttamilnews
புதுடெல்லி,
ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்திய தூதராக சையது அக்பரூதின் உள்ளார். இவரது டுவிட்டர் கணக்கில் ஊடுருவிய ஹேக்கர்கள், பாகிஸ்தான் தேசிய கொடி புகைப்படத்தையும் பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசைன் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தனர்.
இன்று அதிகாலை நேரத்தில் இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சையது அக்பரூதினின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த புளூ டிக்கும், அந்த நேரத்தில் மாயமாகி இருந்தது. சில மணி நேரங்கள் கழித்து சையது அக்பரூதினின் டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீப காலமாக சைபர் தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் சமூக வலைதள பக்கங்கள், அதிகாரிகள் ஆகியோரை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் ஈடுபடுகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் உள்ள 199 இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளன. 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 700 க்கும் மேற்பட்ட இந்திய இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.