ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து வந்த ஆந்திர பிரதேச மாணவர் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை
ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து வந்த ஆந்திர பிரதேச மாணவர் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மிட்னாபூர்,
ஆந்திர பிரதேசத்தில் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர் ஜி. அமினி ரெட்டி (வயது 24). மேற்கு வங்காளத்தில் உள்ள ஐ.ஐ.டி. காரக்பூரில் எம்.டெக் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்த இவர் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் மற்றொரு மாணவரும் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், நீண்ட நேரம் அவரை காணாத மற்றொரு மாணவர் விடுதி காவலரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் அமினி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணம் தெரிய வரவில்லை.
இவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வருடம் ஆகஸ்டில் ஐ.ஐ.டி. காரக்பூரில், விண்வெளி பொறியியல் படிப்பில் நான்காம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த நிதின் என்ற 22 வயது மாணவர் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்த வருத்தத்தில் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.