தீவிரவாத தாக்குதல்; பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச போலீசார் ரூ.7.5 கோடி நிதியுதவி
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.7.5 கோடியை மத்திய பிரதேச போலீசார் நிதி உதவியாக வழங்கி உள்ளனர்.
போபால்,
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த வாரம் தற்கொலை தாக்குதல் நடத்தினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் அலுவலகத்தில் அவரை சந்தித்து மாநில டி.ஜி.பி. வி.கே. சிங் ரூ.7.5 கோடிக்கான காசோலையை நிதியுதவியாக இன்று வழங்கினார். போலீசார் தங்களது மாத வருவாயில் இருந்து நிதியை திரட்டி நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
இந்த நிதியானது காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவியாக வழங்கப்படும்.