கேரளாவில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை
கேரளாவில் கனமழையை முன்னிட்டு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கேரளாவில் கனமழையை முன்னிட்டு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்து உள்ளது.
ரெட் அலெர்ட் விடப்பட்ட பகுதிகளில் தீவிர கனமழை முதல் மிக தீவிர கனமழை பெய்ய கூடும். இந்த அலெர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவை அடங்கும். இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்ட பகுதிகளில் கனமழை முதல் தீவிர கனமழை பெய்ய கூடும்.