23, 24-ந் தேதிகளில் பிரதமர் மோடி அமீரகத்தில் சுற்றுப்பயணம் - உயரிய விருது வழங்கப்படுகிறது

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவருக்கு அமீரகத்தின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது.

Update: 2019-08-18 23:30 GMT
புதுடெல்லி,

இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. இது முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மேலும் நெருக்கமடைந்தது. குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அமீரகம் சென்று இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அங்கு நடந்த சர்வதேச மாநாட்டிலும் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போதும் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதைப்போல அமீரக பட்டத்து இளவரசர் கடந்த 2016-ம் ஆண்டில் ஒருமுறையும், 2017-ம் ஆண்டு குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராகவும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையே உறவு மேலும் பலப்பட்டு வருகிறது.

இந்த உறவு பாலத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காக பிரதமர் மோடிக்கு அமீரகத்தின் மிகவும் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயாத்’ விருது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அமீரக நிறுவன தந்தையான ஷேக் சயாத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது அவரது நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி மோடிக்கு வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற 23-ந் தேதி அமீரகம் செல்கிறார். 24-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் அவர், பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் பரஸ்பர நலன்களுக்கான இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவருக்கு ‘ஆர்டர் ஆப் சயாத்’ விருது வழங்கப்படுகிறது. இதற்காக அவர் ஏற்கனவே அமீரக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

பின்னர் அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 24-ந் தேதி பஹ்ரைன் செல்கிறார். அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். 25-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி அந்த நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

குறிப்பாக பஹ்ரைன் பட்டத்து இளவரசர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபாவுடன் இருதரப்பு மற்றும் பிராந்திய, சர்வதேச நலன்கள் குறித்து விவாதிப்பார். பின்னர் அங்குள்ள மனாமாவில் புனரமைக்கப்பட்டு உள்ள கிருஷ்ணர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைப்பார். இந்த பயணத்தின் போது பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலிபா, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து வழங்குவார்.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்