ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சஞ்சய் ராவத்துடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சஞ்சய் ராவத்தை சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் சந்தித்தனர்.

Update: 2019-11-12 22:00 GMT
மும்பை,

சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியருமான 57 வயது சஞ்சய் ராவத்துக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி (இதய அடைப்பு நீக்கம்) சிகிச்சை செய்யப்பட்டது.

மராட்டியத்தில் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி கேட்டு பா.ஜனதாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு, அரசியலில் நடந்த அடுத்தடுத்து திருப்பங்களுக்கு காரணமானவர் என்று அறியப்படும் இவர் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆஸ்பத்திரியில் சஞ்சய் ராவத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இதேபோல் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், ஆஷிஸ் செலார் ஆகியோரும் சஞ்சய் ராவத்தை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்