சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் - தாக்குதலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தாக்குதலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2019-12-02 20:15 GMT
புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து என்ற பெண், சபரிமலை கோவிலுக்கு செல்ல தனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவரை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி, அவர் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பிந்து தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சபரிமலை தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வர உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சபரிமலை செல்லும் பெண்களை தடுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்