4% அகவிலைப்படி உயர்வு; 1.13 கோடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் - பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-13 11:00 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய  நடப்பு பருவத்துக்கு அகவிலைப்படியை எத்தனை சதவீதம் உயர்த்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வந்தது.

மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்கள் மூலம் ஆலோசனை பெறப்பட்டு இருந்தது. அதன்அடிப்படையில் மத்திய அரச ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை 4 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்  மத்திய அமைச்சரவை கூட்டம் குறித்து டெல்லி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்படுகிறது.  அகவிலைப்படி உயர்வால் 1.13 கோடி அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்