ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-08-17 05:40 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி  மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர், ஜம்மு காஷ்மீர் போலீஸ் சிறப்பு அதிகாரி என 3 பேரும் மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் மூவரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களில் பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் நடத்தும் 2-வது தாக்குதல் இதுவாகும். கடந்த 14 ஆம் தேதி நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர்  இருவர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். 

மேலும் செய்திகள்