தேச துரோக வழக்கு: ஆயிஷா சுல்தானாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரள ஐகோர்ட்

தேச துரோக வழக்கில் ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.

Update: 2021-06-25 07:24 GMT
கவராத்தி,

லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் தயாரிப்பாளருமான ஆயிஷா சுல்தானா, டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக பேசினார். லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிரான இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாஜக தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவின் கவராத்தி போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா சுல்தானா மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆயிஷா சுல்தானாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி லட்சத்தீவில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் ஆயிஷா சுல்தானா.

இந்நிலையில், ஆயிஷா சுல்தானாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது ஆயிஷா தரப்பு வாதம் மற்றும் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, ஆயிஷாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

மேலும் செய்திகள்