தடகள மைதானத்தில் கார்களை நிறுத்தி சர்ச்சை: மராட்டிய விளையாட்டு ஆணையாளர் விளக்கம்
மராட்டியத்தில் தடகள மைதானத்தில் கார்களை நிறுத்திய சர்ச்சையில் மாநில விளையாட்டு ஆணையாளர் விளக்கம் அளித்து உள்ளார்.
புனே,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், புனே நகரில் சிவசத்ரபதி விளையாட்டு வளாகத்தில் தடகள மைதானம் ஒன்றில் வீரர்கள் ஓட கூடிய சிமெண்ட் தளம் பூசப்பட்ட, பாதுகாக்கப்பட்ட பகுதியில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன.
இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாநில விளையாட்டு ஆணையாளர் ஓம் பிரகாஷ் பகோரியா இதுபற்றி விளக்கம் அளித்து உள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சிமெண்ட் தளத்தில் காரை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் பவார் சாஹப்பிற்கு காலில் வலி உள்ளது. அவரது காரை மைதானத்தில் நிறுத்தினால் அவர் நடந்து செல்வதற்கு பாதிப்பு இருக்காது என்பதற்காக ஒரே ஒரு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், திடீரென்று பல வாகனங்கள் வந்து விட்டன. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசத்திற்குரியது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதுபோன்ற சம்பவம் இனி மீண்டும் நடைபெறாது என உறுதி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.