இளம் மனைவியை கொலை செய்து மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனா நாடகமாடிய கணவர்

மனைவியை கொலை செய்து அரசு மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-06-29 05:00 GMT
திருப்பதி

திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய போலீசார்,அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசாமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த டெக்கி  புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது. 

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது  புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டில் கொலை செய்து உடலை  மருத்துவமனையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்தது. புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.     

உறவினர்களிடம் ஸ்ரீகாந்த் ரெட்டி தனது மனைவி கொரோனா டெல்டா  வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கு அவர் இறந்து விட்டதாகவும்  கூறி உள்ளார்.  கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலை  கொடுக்கவில்லை என கூறி நாடகமாடி உள்ளார். போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் ரெட்டி நாடகம் அம்பலமானது.

மேலும் செய்திகள்