திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள், இலவச தரிசன நுழைவுசீட்டு ஆன்லைனில் நாளை வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள், இலவச தரிசன நுழைவுசீட்டு ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு 12 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
அதேபோல் சாதாரண பக்தர்களுக்கு 23-ந்தேதி இலவச தரிசன நுழைவு சீட்டுகளை தினமும் 10 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வெளியிடுகிறது. மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.