நாட்டில் விலைவாசி உயர்வு: மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் - தினேஷ் குண்டுராவ்

நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-28 19:21 GMT
பெங்களூரு,

நாட்டில் விலைவாசி உயர்வு எங்கு இருக்கிறது, எந்த பொருட்களின் விலையும் உயரவில்லை என்று மத்திய மந்திரி பகவந்த் கூபா கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அப்படி இருந்தும் விலைவாசி உயர்வு எங்கு இருக்கிறது என்று மத்திய மந்திரி பகவந்த் கூபா கேட்கலாமா?. அவர், இந்த நாட்டில் தான் உள்ளாரா? அல்லது வேறு எந்த கிரகத்தில் இருக்கிறார். 

நாட்டில் ரூ.80-க்கு இருந்த சமையல் எண்ணெய் விலை ரூ.180-க்கு உயர்ந்துள்ளது. ரூ.75 ஆக இருந்த பெட்ரோல் விலை தற்போது ஒரு லிட்டர் ரூ.113 ஆக உயர்ந்திருக்கிறது. ரூ.500-க்கு விற்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆக இருக்கிறது. 

இந்த பொருட்களின் விலை உயரவில்லையா?. இதுதெல்லாமல் விலை உயர்வாக மத்திய மந்திரி பகவந்த் கூபாவுக்கு தெரியவில்லை. அவருக்கு விலை உயர்ந்து விட்டதாக தெரியவில்லை என்றாலும், மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை குறைப்பது குறித்து ஆலோசிக்காமல், தேவையில்லாத கருத்துகளை தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்