“நலத்திட்டங்கள் 100 சதவீத பயனாளிகளை எட்ட வேண்டும் என்பதே எனது கனவு” - பிரதமர் மோடி

மூத்த எதிர்கட்சி தலைவர் தன்னிடம் கேட்ட கேள்வி குறித்த சுவாரஸ்ய தகவலை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.;

Update:2022-05-13 05:59 IST
ஆமதாபாத், 

குஜராத் மாநிலம் பரூச் நகரில், நலத்திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது மூத்த எதிர்கட்சி தலைவர் ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்வி குறித்த ஒரு சுவையான தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது;-

“ஒரு நாள் ஒரு மிகப்பெரிய தலைவர் என்னை சந்தித்தார். அவர் அரசியல்ரீதியாக எங்களை எதிர்ப்பவர். ஆனால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. சில பிரச்சினைகளில் ஏற்பட்ட அதிருப்தியால் என்னை சந்தித்தார்.

அப்போது, ‘‘நாடு உங்களை 2 தடவை பிரதமர் ஆக்கிவிட்டது. இதற்கு மேல் நீங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது?’’ என்று என்னிடம் அவர் கேட்டார். அதாவது, 2 தடவை பிரதமர் ஆகிவிட்டால், எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று அவர் கருதுகிறார்.

நான் மாறுபட்ட துணிச்சல் கொண்டவன் என்று அவருக்கு தெரியாது. குஜராத் மண் என்னை உருவாக்கியது. அதனால்தான், ‘எல்லாம் முடிந்தது. இனிமேல் ஓய்வு எடுப்போம்’ என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நலத்திட்டங்கள் 100 சதவீத பயனாளிகளை எட்ட வேண்டும் என்பதுதான் எனது கனவு.”

இவ்வாறு மோடி பேசினார்.

மூத்த எதிர்க்கட்சி தலைவர் பெயரை பிரதமர் மோடி குறிப்பிடவில்லை. இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒரு மாதத்துக்கு முன்பு தன்னை சந்தித்த நிலையில், பிரதமர் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்