வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்

மைசூருவில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-04 21:21 GMT

மைசூரு:-

தகராறு

மைசூரு பி.பி.கேரியை சேர்ந்தவர் பர்வேஸ் கான் (வயது 17). இவர் அந்தப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சன்னிசவுக் பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பர்வேஸ் கானுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கும் சிறிய பிரச்சினை தொடர்பாக திடீரென்று தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதனை பார்த்த அங்கிருந்த சக நண்பர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து பிரித்து அனுப்பி வைத்தனர்.

கொலை

இந்த நிலையில் சிறிது நேரத்தில் திரும்பி வந்த 15 வயது சிறுவன் மீண்டும் பர்வேஸ் கானுடன் தகராறில் ஈடுபட்டான். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பர்வேஸ் கானை சரமாரியாக குத்தினான். இதில் பலத்த காயம் அடைந்த பர்வேஸ் கான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான பர்வேஸ் கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறிய பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் பர்வேஸ் கானை 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்