ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா; நிதின் கட்காரி பேச்சு

பட்டினி, தீண்டாமை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா என மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசி உள்ளார்.

Update: 2022-09-29 13:10 GMT

மும்பை,

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். நாம் ஏழை மக்கள் தொகையை கொண்ட பணக்கார நாடு. நமது நாடு பணக்கார நாடு. ஆனால் ஏழை மக்கள் பட்டினி, வேலையின்மை, வறுமை, பணவீக்கம், சாதிபாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை சந்தித்து வருகின்றனர். இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல. சமுகத்தில் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு போல, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து உள்ளது. ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளியை குறைக்க கல்வி, சுகாதாரம், சேவைது துறைகளில் வேலை செய்ய வேண்டியது உள்ளது. பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கம் தெளிவானது. ஆனால் சமூக கடமை, உணர்வுடன் நாம் எப்படி வெவ்வேறு வகையான பிரிவுகளில் பணியாற்ற போகிறோம் என்பது தான் சவாலானது. நாம் நமது லட்சியத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே அதை சாதிக்க நமது வேகத்தை அதிகரிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக எல்லோரும் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்