பஞ்சாப்பில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ‘சினூக்’ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
Image Courtesy : PTI
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பர்னாலா பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 'சினூக்' ஹெலிகாப்டரில் இன்று விமானப்படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டரை அங்குள்ள ஒரு திறந்தவெளியில் விமானிகள் அவசரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 'சினூக்' ஹெலிகாப்டர்களை அமெரிக்க ராணுவம் வியட்நாம் போர், முதல் மற்றும் இரண்டாது வளைகுடா போர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தியது. தொடர்ந்து சில தொழில்நுட்பக் காரணங்களால் 2022-ம் ஆண்டு இதன் பயன்பாட்டை அமெரிக்க ராணுவம் நிறுத்திக் கொண்டது. அதே சமயம் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் 'சினூக்' ஹெலிகாப்டர்களில் எந்த பாதிப்பும் இல்லை என போயிங் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சலில் ஹப்டே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.