மின்வெட்டை கண்டித்து கர்நாடக முழுவதும் வருகிற 19-ந் தேதி போராட்டம்

மின்வெட்டை கண்டித்து கர்நாடக முழுவதும் வருகிற 19-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2023-10-11 18:45 GMT

மைசூரு

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் விளைநிலங்கள் கருகி விடுகின்றன.

இந்தநிலையில், தொடர் மின்வெட்டை கண்டித்து கர்நாடகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி விவசாய சங்கத்தினர் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளனர்.

மைசூருவில் நேற்று மாநில விவசாய சங்க தலைவர் படகாலபுரா நாகேந்திரா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனது. இதனால் மழையை நம்பி விவசாயம் செய்ய காத்திருந்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும்.

மேலும் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 7 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் வருகிற 19-ந் தேதி மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளோம்.

மைசூரு தசரா சமயத்தில் பிரதாப் சிம்ஹா எம்.பி. தேவையில்லாத விஷயங்களை எழுப்பி மக்களிடம் குழப்பங்களை உண்டாக்கி கொண்டிருக்கிறார். ஆன்மிக உரிமை சட்டத்தின் படி அவரவர் பிடித்த தெய்வங்களை வணங்க எல்லாருக்கும் உரிமை உள்ளது.

மகிஷா தசரா விழாவை தடுப்பதற்கு பிரதாப் சிம்ஹா எம்.பி. க்கு என்ன உரிமை உள்ளது. மகிஷா தசரா விழா நடத்த விவசாய சங்கத்தினர் ஆதரவு உண்டு. ஊர்வலத்தில் விவசாய சங்கத்தினர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்