கோவையில் பூனை நாய்கள் கண்காட்சி
கோவையில் சர்வதேச அளவிலான பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது;
கோவை
கோவையில் சர்வதேச அளவிலான பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி
சர்வதேச அளவிலான பூனைகள் கண்காட்சி கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நாய்களுக்கான கண்காட்சியில் ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், சிவாவா உள்ளிட்ட பல்வேறு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற இந்திய நாய் இனங்களும் என 30-க்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த 250 பங்கேற்றன.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாய் இனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்களும் பங்கேற்றன. பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பின்பற்றப்படும் இனங்களின் தரத்தின் அடிப்படையில் நாய்களை மதிப்பிட்டனர்.
பரிசு
பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற 150 பூனைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான இனங்களுடன் கண்காட்சியில் பங்கேற்றன.
சுதாகர் கடிகினேனி, ஆனி கரோல் மற்றும் டாக்டர் பிரதீப் ஆகியோர் உள்ளடக்கிய நடுவர் குழுவினர் சர்வதேச தரத்தின்படி பூனைகளை மதிப்பீடு செய்தனர்.
தொடர்ந்து சிறந்த நாய்கள் மற்றும் பூனைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் ஆர்வம்
பூனை கண்காட்சியில் இடம்பெற்ற சில பூனைகள் சிறுத்தை புலி குட்டியை போன்று தோற்றம் இருந்தது. கண்காட்சிக்கு வந்திருந்த சில நாய்கள் தரையில் படுத்து ஓய்வெடுத்தன. கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் வித்தியாசமான தோற்றங்களில் இருந்த நாய்கள் மற்றும் பூனைகளை ஆர்வத்துடன் பார்த்தனர்.
அத்துடன் அவற்றின் அருகே சென்று தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ள வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்த நாய் மற்றும் பூனைகளை கொண்டு வந்து இருந்தனர். அதில் கோவை பீளமேட்டை சேர்ந்த பிரபு என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த செயின்ட் பெர்னாட் என்ற வகையை சேர்ந்த நாயை அழைத்து வந்திருந்தார்.
ஒரு வயதே ஆன அந்த நாய் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அப்போது அந்த நாயின் அருகே சென்று ஏராளமான பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.