மோட்டார் சைக்கிள் மோதி தனியார் கல்லூரி காவலாளி பலி

Private college security guard killed in motorcycle collision;

Update:2022-11-16 01:00 IST

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தனியார் கல்லூரி காவலாளி பலியானார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

தனியார் கல்லூரி காவலாளி

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராக்கியண்ணன் (வயது 65). இவர், பரமத்தி அருகே தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்ல தனது வீட்டில் இருந்து நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையில் நடந்தபடி சைக்கிளை தள்ளி கொண்டு சென்றார்.

அப்போது பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ராக்கியண்ணன் மீது மோதியதாக தெரிகிறது. இதில் அவர், தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

சாவு

இதை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த ராக்கியண்ணனை‌ மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மோட்டார் சைக்கிளில் வந்து படுகாயம் அடைந்த இருவரையும்‌ நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராக்கியண்ணனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, ராக்கியண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கட்டிட தொழிலாளர்கள்

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து படுகாயம் அடைந்த 2 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கட்டிட தொழிலாளர்கள் என்பதும், நாமக்கல் கோட்டை பகுதியை சேர்ந்த காதர்சலீம் (35), அதே பகுதியைச் சேர்ந்த ஆசாத் (19) என்பது‌ தெரிய‌வந்தது.

இவர்கள் இருவரும் பரமத்திவேலூருக்கு வேலைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல நாமக்கல் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்