சேலத்துக்கு கடத்த முயன்ற1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்

கல்வராயன்மலையில் இருந்து சின்னசேலத்துக்கு கடத்தி செல்ல முயன்ற 1,000 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-09-09 17:07 GMT

கச்சிராயப்பாளையம்

வாகன சோதனை

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலும், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலும் போலீசார் கல்வராயன்மலை எழுத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனித்தனியாக 6 மோட்டார் சைக்கிளில் 13 லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பள்ளத்தில் லாரி டியூப்களை உருட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதைப்பார்த்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அங்கிருந்து கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு சென்று தலைமறைவாகி விட்டனர்.

6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

இதையடுத்து பள்ளத்தில் கிடந்த 13 லாரி டியூப்களையும் போலீசார் பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது அதில் மொத்தம் 1,000 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதை மர்ம நபர்கள் கல்வராயன்மலை எழுத்தூரில் இருந்து சேலம் மாவட்டம் தலைவாசல் வழியாக மோட்டார் சைக்களில் கடத்தி செல்லும் வழியில் போலீசாரை கண்டதும் பயந்துபோன அவர்கள் லாரி டியூப்களை பள்ளத்தில் உருட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தொியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை தரையில் ஊற்றி போலீசார் அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கல்வராயன்மலை மேல்முருவம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், ரமேஷ், கோவிந்தன், திருப்பதி, சீனு உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்