மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பரிதாப சாவு

பாளையங்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-04-23 19:58 GMT

பாளையங்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நண்பர்கள்

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் முகமது அல்அஷர் சர்கார் (வயது 40). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன் (35). விவசாயி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் பாளையங்கோட்டையில் இருந்து கோட்டூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள ரைஸ்மில் அருகில் சென்றபோது, சாலையோரம் உள்ள இரும்பு மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

2 பேர் பரிதாப சாவு

இதில் சாலையோர பள்ளத்தில் முட்செடிகளுக்குள் தூக்கி வீசப்பட்ட அவர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முகமது அல்அஷர் சர்கார், கணேசன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை அருகே சாலையோர மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்