தனித்தனி விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-11-30 21:54 GMT


மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பத்தை அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் தரணிஷ் (வயது 17). வடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கடலூர்-சேலம் சாலையில் சேப்ளாநத்தம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தரணீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூதாட்டி சாவு

மந்தாரக்குப்பம் ஏ.எல்.சி. தேவாலயம் அருகே வசித்து வந்தவர் மேரி என்கிற கண்ணம்மாள்(60). இவர் சம்பவத்தன்று தேவாலயத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். நிலக்கரி சுரங்கம் 2 அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி மேரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்