2 வது நாளாக நீடிக்கும் பதட்டம் : 2 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே இன்று 2 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 2வது நாளாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது. #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi
தூத்துக்குடி
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸ் டிஜிபி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் மதுரை டிஐஜி பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
4 நீதிபதிகள் முன்னிலையில், 6 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது.
மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீசார் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.