தென்மேற்கு பருவமழை துவக்கம்: மீனவர்கள் மே 30-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் - வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை துவங்கியதால் மீனவர்கள் மே 30-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளனர். #Regional Meteorological Centre

Update: 2018-05-26 03:02 GMT
சென்னை,

அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மீனவர்கள், மே 30 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வா‌னிலை ஆ‌ய்வுமைய‌ம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெயில் தாக்கம் குறையவில்லை. வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்கும் சூழ்நிலை காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து குமரி கடல் கேரளா, கர்நாடக கடற்கரை பகுதி, லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா கடல் பகுதிகளில் மே-30 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்