தமிழகத்தில் 2,106 விநாயகர் சிலைகள் இதுவரை கரைப்பு

தமிழகத்தில் 2,106 விநாயகர் சிலைகள் இதுவரை கரைக்கப்பட்டு உள்ளன.

Update: 2018-09-16 14:05 GMT
சென்னை,

நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கலாம் என்று போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி கோவில் நிர்வாகங்கள், வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரை பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கடலில் யாரும் இறங்கிடாத வகையில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் மின் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று நடந்தது.  விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஆக கொண்டு செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டன.  தமிழகத்தில் இதுவரை 2,106 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்