ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்தை சூறையாடி கொண்டிருக்கின்றன டி.டி.வி. தினகரன் அறிக்கை

ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தை சூறையாடி கொண்டிருக்கின்றன என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2019-02-23 21:30 GMT
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் களத்தில் ஒரு வீரப்பெண்மணியாய் பரிணமித்து, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்க்கையை ஓர் அர்ப்பணிக்கப்பட்ட தியாக வாழ்வாகவும், தவவாழ்வாகவும் வாழ்ந்தவர் ஜெயலலிதா. மத்திய அரசின் அதிகாரத்திற்கு தலைவணங்கி நின்றிருந்தால் ஆயிரம் ஆதாயங்கள் தனக்கு கிடைக்கும் என்ற நிலையிலும் கூட, தன்னலத்தை புறந்தள்ளி தமிழக மக்கள் நலனை முன்னிறுத்தியதோடு, அவற்றை முன்னின்று காத்திட்டவர்.

இன்றைக்கு அவர் இல்லை என்ற நிலையில், அவரால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க. சுயநலவாதிகள் கையில் சென்றதோடு, மத்திய ஆதிக்க சக்திகளுக்கு தலையாட்டி பொம்மையாக மாற்றப்பட்ட கொடுமையை நீக்கவும், சீரழிக்கப்படும் தமிழகத்தை காக்கவும், அ.தி.மு.க.வை மீட்கவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அவதரித்துள்ளது.

உண்மை தொண்டர்கள்

ஜெயலலிதா அரசியல் பயணத்தை தொடங்கிய காலம் முதல் அவருக்கு பக்கபலமாய், தக்க துணையாய், தாயாக, தோழியாக திகழ்ந்தவர் சின்னம்மா (சசிகலா). அரசியல் சதியால் பின்னப்பட்ட பொய் வழக்கில் இன்னலை எதிர்கொண்டிருந்தாலும், தன் இதயத்தால் நம் பணிகளை வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்.

ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் சுதந்திரமாக நுழைந்து தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு போராடிவரும் மக்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் இருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான்.

ஜெயலலிதா பிறந்தநாளில் அவர் கொண்ட கொள்கைகளையும் கண்ட கனவுகளையும் நிறைவேற்றிட வீர சபதம் ஏற்போம். கைகோர்த்து நிற்கும் சுயநலவாதிகளை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் எதிர்கொண்டு வீழ்த்தும். வாகை சூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்