தேமுதிக நிர்வாகிகள் என்னை சந்திக்க உள்ளார்கள், கூட்டணி உறுதியாகும் - துணை முதல்வர் ஓபிஎஸ்

தேமுதிக நிர்வாகிகள் என்னை சந்திக்க உள்ளார்கள். கூட்டணி உறுதியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Update: 2019-03-06 08:58 GMT
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி உடன்பாடுகள் நிறைவடையும் தருவாயை எட்டி உள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் மதில்போல் பூனை போன்று அ.தி.மு.க. பக்கமும், தி.மு.க. பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேற்றுடன் நிறைவு பெற்று, கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனால் தே.மு.தி.க.வுக்கான தி.மு.க. கூட்டணி கதவு அடைக்கப்பட்டது. அதே நேரத்தில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், தேர்தல் பணியாற்றுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகம் வந்தார். அங்கு   கூட்டணி தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவுடன், துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் இன்று  அவசர ஆலோசனை நடத்தினார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுகிறது  அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டது. சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாக உள்ளது. தேமுதிக நிர்வாகிகள் தன்னை சற்று நேரத்தில் சந்திக்க உள்ளதாக கூறினார்.

மீனம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள பியூஷ்  கோயலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  சந்திக்கிறார்.  அதே ஓட்டலில் தேமுதிக நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.  கூட்டணி அறிவிப்பு மீனம்பாக்கத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்