போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2019-07-11 13:01 GMT
மதுரை,

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக-காங். ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது, தற்போது எங்கள் பக்கம் பழியை திருப்பிவிடுகிறார்கள். மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூரில் தினகரன் போட்டியிடவில்லை.

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது.  8 வழிச்சாலை சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படும்.

சாலை அமைக்க வேண்டியது அரசின் கடமை. 8 வழிச்சாலை மாநில அரசின் திட்டமல்ல.  8 வழிச்சாலை திட்டத்தால் 70 கி.மீ. பயண தூரம் குறையும். இந்த திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்று தான் எதிர்க்கின்றனர்.

மத்திய அரசின் திட்டம். கையகப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு கடந்த ஆட்சியை விட அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது.

அனைத்து ஆட்சியிலும் ஆணவப் படுகொலைகள் நடந்து தான் வருகின்றன. ஆணவ கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்-திமுக தான். இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்