காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை உடனே விடுவிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்

காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-13 17:11 GMT
சென்னை,

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாநிலம் பிரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “ ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்திருப்பது, ஏற்க இயலாததும் அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது எந்த விதமான தண்டனை அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்