விழுப்புரத்தில் பரபரப்பு: தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் மோதல்

விழுப்புரத்தில் தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-09 21:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தில் தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை காண ரஜினி ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு தியேட்டர்களுக்கு சென்றனர்.

விழுப்புரத்தில் 4 தியேட்டர்களில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் ஒரு தியேட்டரில் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் பொங்கல் பரிசாக ஒவ்வொருவருக்கும் கரும்பு, காய்கறி விதைகள் ஆகியவற்றை வழங்கினர்.

இவற்றை பெறுவதற்காக ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். கூட்டம் அலைமோதியதால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கரும்பு மற்றும் காய்கறி விதைகளை வாங்கினர்.

அப்போது ரசிகர் ஒருவர், தன்னுடன் வந்த நண்பர்கள் சிலருக்கும் சேர்த்து கொடுப்பதற்காக 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டை அப்படியே எடுக்க முயன்றார். இதை ரசிகர்கள் சிலர் தட்டிக்கேட்டனர்.

இதனால் அவர்களுக்கிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதை பார்த்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் குறுக்கிட்டு அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் ரசிகர்கள் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இதில் ரசிகர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர்.

ரஜினி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்