ரூ.109 கோடியில் அறநிலையத் துறையில் 19 புதிய திட்டப் பணிகள்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, 15 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், கோவில்களுக்கு குடமுழுக்குகள், தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் கோவில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், ஒருகால பூசைத் திட்டம் விரிவாக்கம், ஒருகால பூசைத் திட்ட கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
11 கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோவிலில் 59.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்னி தீர்த்தம் படித்துறை, வாகன நிறுத்துமிடம், பிர்லா காட்டேஜ் பகுதி, கோவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அடிப்படை வசதி மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல்; 16.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் புதியதாக 54 கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல்; திருவாரூர், தியாகராஜசுவாமி கோவிலில் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கமலாலய திருக்குளம் திருப்பணி, தேவாசிரிய மண்டபம் மற்றும் முன்மண்டபம் பழுது பார்த்து புதுப்பித்தல்;
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் 6.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமாளிகைபத்தி மண்டபம் கட்டுதல்; புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம், பசுபதீஸ்வரர் கோவிலில் 3.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன்னதி மகாமண்டபம் மதில்சுவர் திரும்ப கட்டுதல்; சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில் 3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுதல்;
தேனி மாவட்டம், குச்சனூர், சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டுதல்; புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளவிடுதி, அகஸ்தீஸ்வரர் கோவிலில் 2.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன்னதி மகாமண்டபம் மதில்சுவர் திரும்ப கட்டுதல்;
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, செல்லாண்டியம்மன் கோவிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்டுதல்; பெருந்துறை, வாகைத்தொழுவம்மன் கோவிலில் 1.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரம் கட்டுதல்; திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் 1.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்டுதல்; கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம், நவகோடி நாராயணப்பெருமாள் கோவிலில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் என மொத்தம் 108.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள் திறந்து வைத்தல் மற்றும் சிற்றுந்துகளை தொடங்கி வைத்தல், கோவை மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் கோவிலில் 6.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நடைபாதை மண்டபம், சுற்றுச்சுவர், முடி காணிக்கை மண்டபம் மற்றும் உடைமாற்றும் அறை;
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், நாகநாத சுவாமி கோவிலில் 3.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி; கோவை மாவட்டம், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் 1.45 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி; நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில் 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய அன்னதானக் கூடம்;
1.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூர், பைரவநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூர், பரிமள ரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் அலுவலகம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் திட்டக்குடி, அரியலூர் மாவட்டம் - கீழப்பழுவூர், இராணிப்பேட்டை மாவட்டம் - நெமிலி, மயிலாடுதுறை மாவட்டம் - புத்தூர் மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள்;
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1.23 கோடி ரூபாய் செலவிலான 3 சிற்றுந்துகள் என மொத்தம் 15.30 கோடி ரூபாய் செலவிலான 10 முடிவுற்ற பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் துரை.ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கூடுதல் ஆணையர் (திருப்பணி) ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக ராமேஸ்வரத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் செல்லதுரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.