மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் - ஐகோர்ட்டில் மாநகராட்சி அறிக்கை

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து ஐகோர்ட்டில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2020-02-05 05:23 GMT
சென்னை, 

மீனவர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர், மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தவும், அதற்கு வாடகை நிர்ணயம் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையில் கடை வைப்பதற்கு வாடகை என்று மாநகராட்சி நிர்வாகம் சொற்பத் தொகையை நிர்ணயம் செய்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வாடகையை அதிகரிக்க உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மெரினா கடற்கரையில் மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிக்கடைக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரமும், மோட்டார் பொருத்தாத வண்டிக்கடைக்கு ஆண்டுக்கு ரூ.1,500-ம் உரிமம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்