கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-09 22:30 GMT
சென்னை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சூளை பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ஒரு கும்பல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக வேப்பேரி உதவி கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ராகுல் டி ஜெயின் (வயது 24), தினேஷ்குமார்(29) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.53 லட்சம், செல்போன்கள், ‘லேப்-டாப்’கள் மற்றும் பணம் எண்ணும் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஜெய்ஷா(22) என்பவர் தலைமறைவாகி விட்டார். பட்டதாரி வாலிபரான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் உதவி கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ஜெய்ஷாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்