தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.57 ஆயிரம் கடன் சுமை - பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.57 ஆயிரம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-14 23:30 GMT
சென்னை, 

தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்து ரூ.4.56 லட்சம் கோடி கடனுடன் தன்னுடைய 10-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து தமிழகத்திற்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியையும், தமிழக மக்களுக்கு கடும் மனக் கலக்கத்தையும் உருவாக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தின் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள, “தகுதி நீக்க” வழக்கைச் சந்தித்து கொண்டிருக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து 3.56 லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கி, நிதி மேலாண்மையில் படுதோல்வி அடைந்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை என்பதோடு மாநில மொத்த உற்பத்தி குறைந்து போவதில், ‘கின்னஸ்’ சாதனை நிகழ்த்தி இருக்கிறது அ.தி.மு.க. அரசு. கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், இன்று திருத்தப்பட்டது 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, நிதியமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் நிதி மேலாண்மைத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் இது இன்னும் உயருவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில், நிதி நிலைமையை விட்டுச்செல்கிறார்கள்.

புள்ளி விவரங்கள் மூலம் மாயா ஜாலங்களை காண்பிப்பதில் மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க நிதி அமைச்சர் முயற்சி செய்திருக்கிறாரே தவிர உண்மையான நிதி மேலாண்மை தோல்விகளை அவரால் சமாளிக்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

மத்திய வருவாயில் இருந்து வர வேண்டிய 7 ஆயிரத்து 586 கோடி ரூபாயைப் பறிகொடுத்து இருக்கிறார்கள். உள்ளாட்சி நிதி மற்றும் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ஆகியவற்றின் மூலம் பெற வேண்டிய 10 ஆயிரத்து 447 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற முடியாமலும், அதைத் தட்டிக்கேட்கும் தைரியம் இல்லாமலும், தத்தளித்து நிற்கிறார்கள்.

ஒரே ஆண்டில் இப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் மாநில நிதியை தாரை வார்த்து விட்டு, பா.ஜனதா அரசின் மீது ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து மாநில நிதி உரிமையைத் தாரை வார்த்ததை மறைப்பதற்காக நிதி அமைச்சரும், அவருக்கு பட்ஜெட் தயாரிக்க சிறந்த ஆலோசனைகள் வழங்கிய முதல்-அமைச்சரும் பூசி மெழுகி இருக்கிறார்கள்.

பல்வேறு துறைகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதி போய்ச் சேருகிறதா? அல்லது நிதி ஒதுக்குகிறோம் என்று கூறி விட்டு பொய் சொல்கிறார்களா? என்ற அளவிற்கு மோசமான காட்சிகள் பட்ஜெட்டில் இடம்பெற்று கண் சிமிட்டுகின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டம் அமைந்து இருக்கிறது. இந்த திட்டத்திற்கு, கடந்த பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடே ஆயிரத்து 652 கோடி ரூபாய் தான். கடந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து இருந்தால், இந்நேரம் அத்திட்டம் நிறைவு பெறும் நிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அத்திட்டம் அடிக்கல் நாட்டி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் முன்னேற்றம் அடையவில்லை; ஆகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டதா? இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு வெளிப்படையான நிதி ஒதுக்கீடு இல்லை. அம்மா உணவகத்தை அரசு, தனியார் நிதியை நம்பி, அல்லது அ.தி.மு.க.வினருக்குத் தாரை வார்க்கப்போகிறது. ராமநாதபுரம், விழுப்புரம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியை வருடக்கணக்கில் செலவு செய்யாமல் வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது பட்ஜெட் பக்கங்களில் இருந்து தெரிய வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்