நேபாளத்தில் மே 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேபாளத்தில் வரும் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு,
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடு நேபாளம். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக உள்ள நேபாளத்திலும் கொரோனாவின் தாக்கம் உள்ளது. கொரோனாவின் தாக்கம் காரணமாக அந்நாட்டில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சுமார் 2.81 கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளத்தில், இதுவரை 82 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தில், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.