மக்கள் நீதி மய்யம் சார்பில் உருவாக்கப்பட்ட‘நாமே தீர்வு’ இயக்கத்திற்கு தனி இணையதளம் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் செய்தார்

மக்கள் நீதி மய்யம் சார்பில் உருவாக்கப்பட்ட‘நாமே தீர்வு’ என்ற புதிய இயக்கத்திற்கான தனி இணையதளத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் செய்தார்.

Update: 2020-07-05 06:28 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இயக்கத்திற்கான தனி இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களே மக்களின் பிரச்சினைகளுக்கு உதவிடும் ‘நாமே தீர்வு’ என்ற புதிய இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு உதவிட இதுவரை 5 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். 54 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் உதவிகேட்டு வந்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் உதவிகளை கொண்டு சேர்த்திடும் பணியில் அடுத்தக்கட்டமாக நாமே தீர்வு என்ற இயக்கத்துக்கான http://www.naametheervu.org என்ற பிரத்தியேக இணையதளத்தை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் அறிமுகப்படுத்தி உள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எனும் நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்கள் உதவிட எளிதான வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இணையதளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் போன்ற விவரங்கள் நேரடியாக பகிரப்படும். இதனால் உதவியர்கள் தங்கள் உதவி எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும், இன்னும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறியலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்