தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-30 12:38 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 354 பேருக்கும், திருவள்ளூரில் 325 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 175 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக கோவையில் 303 பேருக்கும், மதுரையில் 220 பேருக்கும், ராணிப்பேட்டையில் 272 பேருக்கும், தூத்துக்குடியில் 220 பேருக்கும், திருநெல்வேலியில் 277 பேருக்கும் கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,295 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,78,178 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 57,962 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 25.97 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்