தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-08-05 09:46 GMT
சென்னை, 

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனிடையே மக்களின் நிலை கருதி சில சில தளர்வுகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. 

மத்திய அரசு மூன்றாம் கட்ட தளர்வாக உடற்பயிற்சி கூடங்கள், யோகா கூடங்கள் போன்ற இடங்களை இன்று முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, சினிமா அரங்குகள் மற்றும் பார்களை திறக்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் உடற்பயிற்சி கூடங்களில் 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

மேலும் செய்திகள்