தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களில் நவீன சிக்னல் சிஸ்டம் அறிமுகம்

தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 23ம் தேதி நிறைவு பெற்றது.;

Update:2025-12-25 21:27 IST

தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதை போக்குவரத்தை நடைமுறைப்படுத்த தூத்துக்குடியில் டிசம்பர் 15ம் தேதி துவங்கிய ரெயில் நிலைய ரெயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 23ம் தேதி நிறைவு பெற்றது. அன்றைய தினம் மதுரை கோட்டத்தில் முதன்முறையாக புதிய நவீன 'இன்டர் லாக்கிங் சிக்னல் சிஸ்டம்' நடைமுறைக்கு வந்தது. கணிப்பொறி கட்டுப்பாட்டில் உள்ள இந்த புதிய சிக்னல் அமைப்பு ரெயில்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் கையாள உதவும்.

மேலும் நீளமான ரெயில்களை கையாள 532 மீட்டர் நீளம் கொண்ட முதல் நடைமேடை 595 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது. 22 'எல்எச்பி' ரெயில் பெட்டிகள் கொண்ட ரெயில்களை பராமரிக்க நடைமேடை இல்லாமல் ரெயில்கள் நிறுத்தும் ரெயில் பாதைகள் மற்றும் ரெயில் பெட்டி பராமரிப்பு ரெயில் பாதைகளும் வேண்டிய அளவு நீட்டிக்கப்பட்டுள்ளன. ரெயில் இன்ஜின்கள் ரெயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கு எளிதாக சென்று வர தனி ரெயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பெட்டி கொண்ட மின்மய பராமரிப்பு ரெயில் நிறுத்த தனி ரெயில் பாதையுடன் கூடிய சிறு கூடாரம் மற்றும் கடவுப்பாதை மேம்பாடு ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோன்ற ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் டிசம்பர் 7ம் தேதி மீளவிட்டான் ரெயில் நிலையத்திலும் துவங்கி டிசம்பர் 23ம் தேதி நிறைவு பெற்றது. கூடுதலாக ரெயில் பாதை பராமரிப்பு இயந்திர ரெயில் நிறுத்த தனி ரெயில் பாதையும், பயணிகள் ரெயில் பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க சரக்கு ரெயில் பெட்டிகளை ஒருங்கிணைக்க புதிய 750 மீட்டர் நீள தனி ரெயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு ரெயில் பெட்டிகளை பராமரிக்க தனி ரெயில் பாதையும் சரக்குகளை கையாளும் பகுதியில் கான்கிரீட் தரைதளமும் அமைக்கப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்