தி.மு.க.வை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்பதா? தமிழக பண்பாட்டுக்கு ஒரே எதிரி பா.ஜனதாதான் ஜே.பி.நட்டா கருத்துக்கு, மு.க.ஸ்டாலின் பதிலடி

ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, தி.மு.க.வை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்;

Update:2020-08-25 03:30 IST
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்தை காணொலி வழியாக நடத்திய அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, தி.மு.க.வை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ‘மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வளர்ச்சிக்கு எதிரான கட்சி, தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு சீர்குலைக்கப் பார்க்கிறது’, என்று அவதூறுகளை அவர் அள்ளி வீசியிருக்கிறார்.

இதற்கு முன்பு, தமிழக பா.ஜ.க.வின் நிர்வாக கூட்டத்தில் பேசிய முரளிதரராவும் தி.மு.க.வை விமர்சித்துப் பேசியதுடன், ஜனநாயக மாண்புகளுக்குப் புறம்பாக, ‘மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக விடமாட்டோம்’ என தனிப்பட்ட முறையில் என்னைக் குறிவைத்து பேசியுள்ளார்.

உரிமைகள் பறிக்கப்படும்போது...

உண்மைகளை உரக்கச் சொல்லி, உரிமைகளை வலியுறுத்தினால் அவர்களை ‘ஆன்ட்டி இண்டியன்’ என்றும் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்தும் மலிவான போக்கை பா.ஜ.க.வின் சில தலைவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அதன் தேசிய தலைவர் நட்டாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம், இந்த நாட்டை மாநில அரசுகளின் ஒன்றியம் என்றே குறிப்பிடுகிறது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது தி.மு.க. குரல் கொடுக்கவே செய்யும்.

விமான நிலையத்தில் இந்தியில் பேச வலியுறுத்துவது, அரசின் யோகா பயிற்சி குறித்த கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என விரட்டுவது, இருமொழி கொள்கையைச் சட்டமாக்கி நிலைநிறுத்தி இருக்கும் நிலையில் இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது என தமிழ்நாட்டின் நீண்ட நெடிய பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.

இயலாமை

அதுகுறித்து கேள்வி எழுப்பினால், தி.மு.க.,வை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், நாட்டு நலனுக்கு எதிராகத் தூண்டிவிடுகிற கட்சி என்றும் குற்றம்சாட்டுவது என்பது பா.ஜ.க. தலைமையின் இயலாமை.

பா.ஜ.க. தலைவர்களிலேயே மாற்று கட்சியினராலும் மதிக்கப்பட்டவரான வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், தி.மு.க. பங்கேற்றிருந்தபோது கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கிய அப்போதைய மத்திய மந்திரி முரசொலி மாறன் உலக வர்த்தகம் தொடர்பான தோகா மாநாட்டில் பங்கேற்று, வல்லரசு வல்லூறுகளின் பிடியில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் சிக் காத வகையில் ஒப்பந்தங்களை உருவாக்கினார் என்கிற வரலாற்று ஏட்டின் பக்கங்களை நட்டா போன்றவர்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பண்பாட்டுக்கு எதிரி

மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக மதவாதத்தையும், மொழி ஆதிக்கத்தையும் முன்வைத்து நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கின்ற நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கின்ற கட்சியாக பா.ஜ.க. தான் இருக் கிறது. தமிழகத்தின் பண்பாட்டுக் கும், இந்திய தேசத்தின் ஒருமைப் பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், நாட்டின் அர சியல் சட்டத்திற்கும் பா.ஜ.க. தான் ஒரே எதிரியாகத் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்