உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக அரசு வெளியீடு
உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய தளர்வுகளை அறிவித்து நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் வேறு சில குறிப்பிட்ட பணிகளுக்கும் 1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்.
அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி,
* உணவகங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகளை பணியமர்த்தக்கூடாது.
* வாகன நிறுத்துமிடங்களில் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
* ஊழியர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம்.
* உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.