திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல்

பொதுச்செயலாளா், பொருளாளரைத் தோந்தெடுப்பதற்காக திமுகவின் பொதுக்குழு செப்டம்பா் 9-ஆம் தேதி கூட உள்ளது.

Update: 2020-09-03 10:27 GMT
சென்னை,

தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி கூடுகிறது.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் இன்று பிற்பகலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார்.

இதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் போட்டியின்றி தோந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்